Sunday, November 19, 2006

<<>> 7. கெளரிகுண்டம்...!.<<>>

7

னமென்னும் குகை வாயில். அதன் இருட்டுக்கும், வாசல் வெளிச்சத்துக்கும் நடுவே அமர்ந்திருக்கிறான் மனிதன். விட்டத்தில் பிரும்மாண்டமான தேனடை. கருத்த தேனீக்களின் பெருத்த சுருதி. ஒற்றுமை, ஒரேயொரு ராட்சதத் தேனீ மட்டும் பாடுவதுபோல் தொனிக்கிறது. குகையின் தண்மை, பாதுகாப்பு, மெளனம் இவற்றுக்கு மெருகூட்டுவது போல்தான் ஒலிக்கிறது சுருதி. உறக்கம், விழிப்பு, இவற்றின் மத்தியிலே உள்ளவொரு மர்மமான, இடைஞ்சலான தறுவாயில்தான் இருக்கிறான். உள்ளே ஆயிரமாயிரம் தேனீக்களாலும் கலையாத மெளனம். வெளியே ஆரவாரத்தின் தாழ்வாரம். ஒரு விபத்தைப்போல், புலன்கள் வழியே புறத்தே சிதறுகிறான்... ம்.ம்..தேனடையில் கல்லெறிந்த பின்னே திசைகளை வசைபாடி என்னபயன்?

லயம் கலைந்து, விழுங்கத் தயாராயிருக்கும் புறவொலிகளைக் கருத்தின்றிக் காண்கின்றேன். வந்துவிட்டது கெளரிகுண்டம். கந்தக (வென்னீர்) ஊற்று; சற்று அதில் உட்கார்ந்து எழுந்திருந்தால், பாட்டி சொல்வதுபோல், உடம்பு சொடக்குவிட்டாற் போலிருக்கும். கெளரி தேவிக்கு ஒரு சின்னக் கோவிலிருக்கிறது. இங்கிருந்து கேதார் 14 கி.மீ. படிப்படியாக உயர்ந்து 12,000 அடி உயரத்தைத் தாண்டும் மலைப்பாதை. ஏராளமான குதிரைகள்; அவை கோவேறு கழுதைகளே! சென்று வர, ரூ 700 - 900. 'டோலி' அல்லது 'டண்டி' எனப்படும் சின்னப் பல்லக்கு. நாலுபேர் சுமந்து செல்வார்கள், உயிரோடு! ரூ 2000 - 2700. குதிரையில் ஏறினால் முதுகு, பிருஷ்டம், கால்கள் இவையெல்லாம் மாநில சுயாட்சி பெற்றுவிடும்! 'டோலி?' முதுமக்கள் தாழியில் சிறப்புக் குலுக்கல் நடைபெற்றது போல், எலும்புப் பொட்டலமாகத் திரும்பி வரலாம்! இதைவிட வானப்ரஸ்தமே மேலென்று சில தைரியசாலிகள் நடக்கத் துவங்கி விடுகிறார்கள்.

கழுதை ஏறினான் கோ! இனி, ஒட்டகம், ஆனை, நெருப்புக்கொழி எதில்வேண்டுமானாலும் சவாரிசெய்ய முடியும் என்கிற ஞானம் இரண்டொரு நிமிடங்களிலேயே சித்தித்து விடுகிறது! பாதையைச் செப்பனிடுகிறோம் என்று பாளம்பாளமாகக் கருங்கல் போட்டிருக்கிறார்கள். அதிலே ஏறியிறங்கப் படாதபாடு படுகிறது குதிரை. திடீரென்று அதன் முன்னங்கால்கள் வழுக்க, நமக்கு இதயம் தொண்டையில் வர..சாமி ஏன் சவுகரியமான இடத்தில் இருக்கக் கூடாது என்று தோன்றுகிறது!

மூன்று குதிரைகளுக்கு இரண்டு பயல்கள். குதிரையைப் பிடித்தபடி, பொருட்களைக் கவனித்தபடி, நம்மையும் பார்த்துக்கொண்டு, இந்தக் கடுமையான பாதையில் ஏறியிறங்க வேண்டும். வெகுளி மனம்; வெள்ளைச் சிரிப்பு; பரம ஏழ்மை. இமயத்தின் பலபகுதிகளிலும் இதேபோல், மலைவாழ் மக்கள் வறுமையில்தான் இருக்கிறார்கள். குதிரைக்காரன் பயல்களுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தால் அதிகம். அதுவும் ஆறுமாதங்கள்தான். குளிர்காலத்தில் கோவில் அடைக்கப்படுகிறது. எந்த அரசாங்கமும் இவர்களைக் கவனிப்பதில்லை. உள்நாட்டிலோ பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடி என்று 'ஏழைகளை மேம்படுத்தும்' திட்டங்கள்!! கொள்ளைகள்! மலைவாழ் மக்களோ வறுமைப் பள்ளத்தாக்கில். இப்படிச் செய்துதான், வடகிழக்குப் போயேவிட்டது. இந்தப் பகுதியும்..ஐயோ நினனத்தாலே மனம் நடுங்குகின்றது.

நமக்குப் பலவகையான உணவு; இவர்களோ இரண்டு ரொட்டி கிடைத்தால் போதுமென்கிறார்கள். உடுக்கப் பலவிதமான உடைகள் நமக்கு; இவர்களோ உடுத்ததைக் கழற்றியதே இல்லையோ என்னும்படித் தோற்றமளிக்கின்றனர். நமக்கு இருக்க அழகான இல்லம்; இவர்கள் இருப்பதோ குப்பைக்கொட்டாய். சுகங்களில், எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம் பிரச்சினை. அவர்களுக்கோ வாழ்க்கையே ஒரு பிரச்சினைக் களஞ்சியம். இவர்களிடம்போய்ப் பேரம் பேசும் நம்மவர்களைப் பார்க்கும்போது குமட்டிக்கொண்டு வருகிறது...

குதிரைச் சவாரியில் வலியே மேலென்று தோன்றவைக்கும் சில விபரீதங்கள் உள்ளன என்பதை விழிபிதுங்கப் புரிந்து கொண்டேன்! மூன்று குதிரைகள் என்றேனா? அவற்றில் இரண்டு ஜோடி; ஒன்று இடைச்செருகல். தன்காதலன் அல்லது காதலி கூடவராமல் அடுத்த அடியை எடுத்து வைக்காது ஜோடி! அது வந்து சேர்ந்தவுடன், முகர்தல், முத்தமிடல், சிரிப்பு இவவயெல்லாம் நடந்து முடியக் கொஞ்ச நேரமாகும். எவனும் அசைக்க முடியாது. பயல், அவற்றோடு மன்றாடிக் கொண்டிருப்பான். இதைக் கண்ணுற்ற மூன்றாம் குதிரை, மனமுடைந்து ஆறடி அகல மலைப்பாதையின் விளிம்புக்குச் சென்று, கீழே 4000 அடிப் பள்ளத்தில் ஓடும் நதியில் விழுந்துவிடலாமா என்று யோசித்தபடி குனியும். ஐயன்மீர்! எப்போதும் நான்தான் அந்த மூன்றாம் கழுதைக் கோ! ஆஹா! எல்லா வேதாந்த சித்தாந்த ஞானமும் நொடிப்பொழுதில் விடைபெற்றுக்கொண்டு பறக்க, இதுவரை இல்லாத பக்தியுடன் கேதார நாதரைத் துதித்தபடி நான் உறைந்துபோக, சற்றும் பதறாமல் சிரித்தபடி வந்து மெல்ல இழுத்துச் செல்கிறான் எழுதப் படிக்கத் தெரியாத ஏழைச் சிறுவன்...

ராம்பாடா கிராமம் வந்துவிட்டது. சரியாகப் பாதித் தொலைவில் இருக்கிறது. இங்குதான் நாம் களைப்பாறுகிறோம்; குதிரைகள் கட்டுப் புல் தின்று நீரருந்திச் சேணமின்றி இளைப்பாறுகின்றன. பயல்களெல்லாம் விரிந்த விழிகளோடு அண்டப் புளுகுக் கதைகளைச் சொல்லியபடியே தேனீர் அருந்திக் கொள்வார்கள். அடுத்த 'ரீலை' அளந்துவிடத் துடிக்கிறான் அடுத்தவன்!

ரமணன்...

No comments: